சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி இந்திரன்தான் விண்ணாட்டின் அரசனென்ற இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி... என்று முதன்முதலில் மனிதன் நிலவில் கால்பதித்த போது பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடினார். இப்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் நிலவுக்கு விண் கலத்தை அனுப்பி அந்த வரிசையில் இணைந்து விட்டது. அதிலும் சிறப்பாக நிலவின் தென்பகுதியில் முதன் முதலாக இறங்கி சரித்திரச் சாதனை படைத்து விட்டது. இந்திய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும் அறிவுத்திறனும் விடாமுயற்சி யும் போற்றத்தக்கது.
இந்த வரலாற்றுச் சாதனை படைத்திடக் காரணமாக இருந்தது வீரமுத்துவேல் என்கிற தமிழர் என்பது நமக்குப் பெருமை. அதுவும் அவர் அரசுப்பள்ளியில் படித்தவர் என்பதை அவரே பெருமையுடன் கூறியிருக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்றைய ஒன்றிய பாஜக அரசோ தாய் மொழிக் கல்வி, மாநிலங்களின் தன்மைக்கேற்ற கல்வி என்பதைக் குழி தோண்டிப்புதைத்துவிட்டு இந்தி, சமஸ்கிருதம் படிக்க கட்டாயப்படுத்துகிறது. 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளைப் போட்டு ஏழை எளிய மக்கள் பள்ளிக்கூடம் பக்கம் வருவதையே தடுக்கத் திட்டமிடுகிறது. வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லப் பார்க்கிறது. சமஸ்கிருதம், வேதம் என்று கூறி, ‘ஒருசிலருக்கே கல்வி’ என்றிருந்த பழங்கால நடைமுறையைத் திணிக்க முயற்சிக்கிறது. காசுள்ளவர்களே கல்வி பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்துகிறது.
ஒன்றிய அரசு இப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆய்வுகள், பட்டப் படிப்புகள் என்று விஞ்ஞானத்துக்கு விரோதமாக, அஞ்ஞானத்தை வளர்க்கும் விதமாக கல்வித் துறை நாசம் செய்யப்படுகிறது. இவர்களது முன்னோடி மாநிலம் என்கிற குஜராத்தில் பஞ்சாங்கத்தை பாடமாக வைத்திருக்கிறார்கள் என்பது அதன் உச்சம். வானியல் வெற்றியை விண்வெளி அறிவியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு நேர்மாறாக ஒன்றைப் புகுத்திவிடுவது அவர்களின் சதித்திட்டங்களில் ஒன்று. இது பாசிச சக்திகளின், இந்துத்துவா நடைமுறை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டில் கூட அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் ஒரு படிப்பாக கொண்டு வரப்பட்டது முதல்வர் ஜெயலலிதாவால்.
மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தால்தான் ஆட்சியாளர்களின் அநியா யத்தை எதிர்த்துக்குரல் கொடுக்க மாட்டார் கள் என்பது அவர்களது சாணக்கியத்தனம். அதனால்தான் கல்வியை அனைவருக்கும் தருவதற்கு பாஜக ஆட்சியாளர்களுக்கு கசக்கிறது. ஏனென்றால் ஒரு சில சாதியினரின் மேலாதிக்கத்தை - அறிவாளித்தனத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ளவே இப்படி நடந்துகொள்கிறது. அதனால்தான் அவர்களது கல்விக் கொள்கை எதிர்ப்புக் குள்ளாகியிருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.
விடுதலைப் போராட்ட காலத்தில் அனை வருக்கும் கல்வி என்பது முன்னுக்கு வந்தது. மகாகவி பாரதி பாடினான். “மந்திரம் கற்போம், வினைத் தந்திரம் கற்போம்; வானை அளப்போம் கடல்மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்; சந்திந் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்” என்று. அவர் கூறியதுபோல சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிந்துவிட்டோம். ஆனால் சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம்தான் சவாலாக உள்ளது.
தூய்மை பாரதம் என்று பிரதமர் மோடி திட்டம் அறிவித்து ஒரு பயனும் இல்லை. அந்தத் திட்டத்தின் லோகோ - இலச்சினை-கூட காந்தியை அவமானப்படுத்தும் வகையில் அவரது மூக்குக் கண்ணாடியுடன் விளம்பரப் படுத்தப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி கூட முழு தூய்மைத் தொகுதியாகவில்லைஎன்பதை பிபிசி செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. இவரோ துப்புரவுப் பணியாளர்களை ‘கடவுளின் குழந்தைகள்’ என்று கூறி, அவர்கள் அந்தத் தொழிலை செய்வது அவர்களுக்குப் பெருமை என்று பிதற்றினார். அது ஒரு பணி. அதை எல்லா சாதியினரும் செய்யலாம்தானே. பிறகேன் ஒருசில சாதியே அந்தப் பணியைச் செய்திட நிர்ப்பந்திக்கப்படுகிறது கழிவுநீர்த்தொட்டிகளை , மலக்குழிகளை சுத்தம் செய்ய வைக்கப்படுகிறது. அந்தப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் கொடுமை ஏன் அவர்களுக்கு மட்டும் நேர்கிறது?
மனித மலத்தை மனிதரே அகற்றுவதை தடை செய்து 2013-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2014-இல் மோடி பிரதமராகிவிட்டார். ஆனால் அந்தச் சட்டத்தின் அமலாக் கம் பற்றி மோடி அரசு எந்தக் கவலையும் படவில்லை. இதற்குக் காரணம் அவரது வழிகாட்டும் கொள்கை வர்ணாச்சிரமம் - தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறும் சனா தனம். அது சாதியப் படிநிலைகளை மாற்ற அனுமதிக் காதே! அது தான் காரணம். இதனால் மோடியின் ஆட்சியில் பறிபோன உயிர்கள் எத்தனை? அவரது ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ராம்தாஸ் அதவாலே நாடாளு மன்றத்தில் அறிவித்த புள்ளிவிபரங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
2017-இல் 100 பேர் மரணம்.2018 - 67; 2019 - 117; 2020 - 22; 2021 - 58; 2022-66 என மலக்குழி மரணங்கள் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட் டுள்ளது. கணக்கில் வராதது எத்தனையோ? யாரறிவார்? இந்த மரணங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம். குறிப்பாக குஜராத், உத்தரப் பிரதேசம். இந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதிய விபரப்படி மலக்குழி மர ணங்கள் 1093 என்றும் 1081 என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 225 மரணங்கள் என்பது சற்று அதிகமாகவே உள்ளது.
இத்தகைய மரணங்களைத் தவிர்ப்பதற்கு கழிவு நீர்த்தொட்டிகள், சாக்கடை அடைப்புகள், மலக்குழிகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய எந்திரங்களைப் பயன்படுத்து வதே சிறந்தவழி. இத்தகைய முயற்சியில் சென்னை ஐஐடி- மாணவர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது போல் இவர்களுக்கு முன்னோடியாக கேரள மாநி லத்தில் ஒரு எந்திரம் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படு கிறது என்பது மிக முக்கியமானது. இதையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் தில் இதற்கென ஒரு தொழில் துட்பப்பிரிவைத் தொடங்க வேண்டும் என்பதே அது. இது விரைவாக செயல்படுத்தப் பட்டு நவீன எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் மலக்குழி மரணங்கள் நடைபெறாத சூழல் உருவாகும். இதற்கு தமிழ்நாடு அரசு கணிசமான நிதியை ஒதுக்கி ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் தந்தால் - இந்தியா வுக்கு வழிகாட்டும் மாநிலமாகத் திகழும் வாய்ப்புள்ளது. பாரதியின் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் - சாக்கடை சுத்தம் செய்யும் சாத்திரம் நடைமுறைக்கு வரும்.
அவ்வாறு இயந்திரங்கள் வந்துவிட்டால் பல்வேறு சாதியினரும் தூமைய்ப்பணி செய்ய தயாராகிவிடுவர். தூய்மைப் பணி என்றால் அது குறிப்பிட்ட பிரிவினரே செய்ய வேண்டும் என்ற குலத்தொழில் கொடுமைக்கும் ஒரு விடிவு பிறக்கும். நாடும் சுத்தமாகும்.